சிறார்களுக்கு சமூகவலைத்தளங்களில் கதவடைப்பு: ஆஸ்திரேலியாவின் வழியை பின்பற்றுகிறது பிரிட்டன்
பிரித்தானியாவில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch) அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா அண்மையில் அமுல்படுத்திய சட்டத்தைப் பின்பற்றி, சிறுவர்களின் மனநலம் மற்றும் கல்வியைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, டிக்டொக் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற நிறுவனங்கள் கடுமையான வயதுச் சரிபார்ப்பு முறைகளைக் கையாள வேண்டியிருக்கும்.
அதேவேளை, பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்குத் தடை விதிக்கப்படும் என்ற வாக்குறுதியையும் கன்சர்வேடிவ் கட்சி முன்வைத்துள்ளது.
இதற்கு ஆசிரியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், தற்போதைய அரசாங்கம் இத்தடையை உடனே அமுல்படுத்த விரும்பவில்லை.
மாறாக, சிறுவர்களின் மொழி வளர்ச்சியைப் பாதிக்கும் ‘திரை நேரத்தை’க் (Screen Time) கட்டுப்படுத்துவது குறித்துப் பெற்றோர்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப் போவதாகக் கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் (Bridget Phillipson) தெரிவித்துள்ளார்.





