திருமலை சம்பவம்: இனவாதம், அரசியலுக்கு இடமில்லை! அரசு திட்டவட்டம்!
திருகோணமலை விவகாரத்தை வைத்து இனவாதம் மற்றும் அரசியல் நடத்துவதற்கு இடமளிக்கப்படாது. கடந்தகால சம்பவங்கள் இனி நடக்காது என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று மதியம் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,
“ புத்தர் சிலைக்கு சேதம் விளைவிக்கப்படக்கூடும் என்பதாலேயே திருகோணமலை துறைமுக பொலிஸாரால் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது. இரவு 10 மணியளவில் சம்பவம் நடந்ததால் உரிய பொலிஸ் பாதுகாப்பை வழங்க முடியவில்லை.
எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்வரை புத்தர் சிலை பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டது. துறைமுக பொலிஸில் இது தொடர்பில் பதிவு உள்ளது.
பாதுகாப்பை பலப்படுத்தி புத்தர் சிலை இருந்த இடத்தில் மீண்டும் வைக்குமாறு கூறினோம்.
இனவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்கமாட்டோம். இப்பிரச்சினையை அரசியல் மயப்படுத்தவும் இடமில்லை. சும்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சு நடத்தி பிரச்சினையை தீர்ப்போம். சில விடயங்களுக்கு நீதிமன்றம் ஊடாக தீர்வு காணப்படும்.” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.




