இந்தியாவில் அரசுப் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய மூன்று ஆசிரியர்கள் கைது!
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/New-Project-4-3-1280x700.jpg)
இந்தியாவின் கிருஷ்ணகிரி பகுதியில் 8 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயின்று வரும் 8-ஆம் வகுப்பு சிறுமிக்கு, அதே பள்ளியில் பணியாற்றி வரும் மூன்று ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
குறிப்பாக, ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததில் மாணவி கர்ப்பமடைந்ததாகவும், பின்னர் மாணவிக்கு கருக்கலைப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி கடந்த சில நாட்களாக பள்ளிக்கு வருகை தராமல் இருந்துள்ளார். இது தொடர்பான தகவல்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் அறிந்து கொண்டனர்.
பின்னர் மாணவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது அவர் கல்விகற்ற பாடசாலையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் இருவரும் , ஒரு இடைநிலை ஆசிரியரும் சேர்ந்து குறித்த மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகிய மூன்று ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர்களின் டி.என்.ஏ மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட மூன்று ஆசிரியர்களையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.