மொட்டுக் கட்சயிலிருந்து விலகி சர்வஜன அதிகாரத்திற்கு தாவிய தேரர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் செயற்பாடுகள் காரணமாக, அக்கட்சியின் கலென்பிந்துனுவெவ பிரதேச சபை உறுப்பினராகப் பணியாற்றிய அநுராதபுர சோமரதன தேரர் அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
அத்துடன் அவர் சர்வஜன அதிகாரம் கட்சியின் மிஹிந்தலை தொகுதி அமைப்பாளர் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.
திஸ்ஸகுட்டி ஆராச்சி அநுராதபுர மக்கள் தொடர்பில் வெளியிடும் சில கருத்துக்களும் அவரது செயற்பாடுகளுமே தாம் கட்சியிலிருந்து விலகக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலை தொடர்ந்தால், அநுராதபுர மாவட்டத்தில் பொதுஜன பெரமுன தனிமைப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சர்வஜன அதிகாரம் கட்சியுடன் இணைந்தது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“நாங்கள் இனி ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. மிஹிந்தலை தொகுதியில் போட்டியிட்ட உறுப்பினர்கள் மற்றும் தொகுதிப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்துள்ளனர்.
சிறந்த அமைப்பொன்றைக் கட்டி எழுப்பி மிஹிந்தலை தொகுதியில் பாரிய வெற்றியொன்றைப் பெற நடவடிக்கை எடுப்போம்.
முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுகிறோம். சர்வஜன அதிகாரம் கட்சியாக எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். இதேநிலை நீடித்தால் பொதுஜன பெரமுனவினர் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
திஸ்ஸகுட்டி ஆராச்சி தொலைபேசி மூலம் அரசியல் செய்பவர், ஆனால் நாங்கள் இங்கு களத்தில் இறங்கி அரசியல் செய்கிறோம்” என்றார்.





