என்.பி.பி. அரசிலுள்ள தமிழ் எம்.பிக்கள் உடன் பதவி விலக வேண்டும்!
தேசிய மக்கள் சக்தி அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பௌத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது. எனவே, பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா உட்பட அக்கட்சியிலுள்ள அனைத்து தமிழ் உறுப்பினர்களும் உடன் பதவி விலக வேண்டும்”
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் அவர் இட்டுள்ள பதிவு வருமாறு,
“ அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தே. ம. ச. அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கேவலமாகக் காண்கிறது.
நேற்றிரவு அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை பொலிசாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள்.
ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். பாதுகாப்புக்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீள நிறுவப்படும் என்றும் வெட்கமில்லாமல் அறிவித்த போதே சகல மக்களும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது.
தே. ம. ச. அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பௌத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது. இக் கட்சியைச் சேர்ந்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா உட்பட அனைத்து தமிழ் உறுப்பினர்களும் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





