எதிரணிகளின் கூட்டு அரசியல் சமருக்கு ஆளுங்கட்சி பதிலடி!
எதிரணி கூட்டணியானது அரசாங்கத்துக்கு எவ்வித சவாலும் அல்ல எனவும், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அஞ்சவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி எதிரணிகள் ஓரணியில் திரளவுள்ளன. நுகேகொடையில் இருந்துதான் மஹிந்த சூறாவளிகூட ஆரம்பமானது. எனவே, 21 ஆம் திகதி பேரணி குறித்து அரசு அஞ்சுகின்றதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, வழக்கு தொடுக்கப்பட்டுவருகின்றது. அதேபோல அரசியல் வாதிகளின் சொத்து குவிப்பு பற்றியும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதனால் சில எதிரணி உறுப்பினர்கள் பீதியடைந்துள்ளனர்.
இவ்வாறானவர்கள் இணைந்து அமைப்பது எதிரணி கூட்டு கிடையாது. அவ்வாறான கூட்டணி அரசுக்கு சவாலாகவும் அமையாது. ஒன்று சேர்வதற்குரிய உரிமை உள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் ஒன்றுகூடலாம். கருத்து வெளியிடும் சுதந்திரமும் உள்ளது. அந்த சுதந்திரத்தையும் பயன்படுத்தலாம். எது எப்படி இருந்தாலும் பீதியால்தான் மேற்படி கூட்டம் நடத்தப்படுகின்றது.
அதேவேளை, தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சவில்லை. கடந்த ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால்தான் மாகாணசபைத் தேர்தல் பிற்போடப்பட்டது.
நாம் எந்தவொரு தேர்தலையும் பிற்போடவில்லை. எந்நேரத்திலும், எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு நாம் தயார்”- என்றார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால.





