தடை உத்தரவை மீறி இலுப்பைகுளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

திருகோணமலை-இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (03) மனித சங்கிலிப் போராட்டமொன்று திருகோணமலை, சாம்பல்தீவு பாலத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உட்பட பெருமளவான மக்கள் கலந்துகொண்டு இலுப்பைக்குளம், பெரியகுள சந்திக்கு அண்மையில் அமைக்க திட்டமிடப்பட்டு வருகின்ற விகாரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக “பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த விகாரை எதற்கு?”
“பெரியகுளம் விகாரை கட்டுமானத்தை உடனடியாக நிறுத்து”,
“தொல்லியல் திணைக்களம் பௌத்தத்திற்கு மட்டுமா?”,
“தொல்லியல் திணைக்களமே இனவாதத்தை தூண்டாதே”
போன்ற வாசகங்களை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் முகமாக திருகோணமலை – நிலாவெளி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற தடையுத்தரவு விண்ணப்பத்தின் அடிப்படையில் திருகோணமலை நீதவான் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கு 14 பேருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.