மத்திய கிழக்கு பதற்ற நிலை விரைவில் சீராகும்: இலங்கை நம்பிக்கை!
“மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை விரைவில் சீராகும் என நம்புகின்றோம். சிலவேளை நீடித்தால்கூட அதனால் மீனவர்களுக்கு தாக்கம் ஏற்படடாத வகையில் உரிய தலையீடு மேற்கொள்ளப்படும்.”
இவ்வாறு கடற்றொழில், நீரில் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekhar தெரிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது,
“ ஒரு மாத காலத்துக்கு தேவையான எரிபொருள் கைவசம் இருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.
அதன்பின்னரும் நெருக்கடி ஏற்பட்டால் மீனவர்களுக்கு தடையின்றி டீசல் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கப்படுமா, அதற்குரிய திட்டம் உள்ளதா” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்,
“ எமது நாட்டில் சிறிய படகுகள்கூட கடலுக்கு செல்வதற்கு வழியின்றி , மீனவர்கள் தவித்துக்கொண்டிருந்த காலப்பகுதியிலேயே நாம் ஆட்சியைப் பொறுப்பேற்றோம்.
மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்கப்படவில்லை. படகுகள் கடற்கரைகளில் கட்டிவைக்கப்பட்டிருந்தன.
எனினும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கையோடு மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்கப்பட்டது. இதனையடுத்து கரையில் இருந்த படகுகள் தொழிலுக்காக கடலுக்குச் சென்றன.” என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை ஓரிரு வாரங்களுக்குள் சீராகும் என நம்புகின்றோம்.
எனினும், மீனவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய தலையீடுகளை அரசாங்கம் மேற்கொள்ளும்.”எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.





