இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வலுவான நிலையில் இந்திய அணி

லீட்ஸ் டெஸ்டில் ‘சரவெடியாய்’ விளாசிய ரிஷாப் பன்ட் இன்னொரு சதம் அடித்து சாதனை படைத்தார். அசராமல் ஆடிய ராகுலும் சதம் அடிக்க, இந்தியா வலுவான முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (‘ஆண்டர்சன்-சச்சின்’ டிராபி) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் லீட்சில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 471, இங்கிலாந்து 465 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 90/2 ரன் எடுத்து, 96 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. கார்ஸ் வீசிய முதல் ஓவரில் கேப்டன் சுப்மன் கில் (8) போல்டானார். பின் கே.எல்.ராகுல், ரிஷாப் பன்ட் நிதானமாக ஆடினர். டங் பந்துவீச்சில் ராகுல் (58 ரன்னில்) கொடுத்த ‘கேட்ச்சை’ புரூக் நழுவவிட்டார்.
இங்கிலாந்து ‘வேகங்கள்’ மிரட்ட, ரன் வறட்சி ஏற்பட்டது. உணவு இடைவேளை வரை கூடுதலாக 63 ரன் (ரன் ரேட் 2.60) மட்டும் எடுக்கப்பட்டது. இந்தியா 153/3 ரன் எடுத்து, 159 ரன் முன்னிலை பெற்றது.
இதற்கு பின் ரிஷாப் அதிரடியை துவக்கினார். டங் ஓவரில் பவுண்டரிகளாக விளாசினார். பஷிர் ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். மறுபக்கம் துாணாக நின்ற ராகுல் அவ்வப்போது பவுண்டரி அடிக்க, ஸ்கோர் படுவேகமாக உயர்ந்தது. ராகுல்-ரிஷாப் நான்காவது விக்கெட்டுக்கு 195 ரன் சேர்த்து, போட்டியை இந்தியா பக்கம் கொண்டு வந்தனர். பஷிர் பந்தில் 2 ரன் எடுத்த ராகுல், டெஸ்டில் 9வது சதம் எட்டினார்.
ஒருநாள் போட்டி போல விளாசிய ரிஷாப், 104 பந்தில் 90 ரன் எட்டினார். விரைவாக சதம் எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூடுதலாக 26 பந்து எடுத்துக் கொண்டார். பஷிர் பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்டு, 130வது பந்தில், டெஸ்டில் தனது 8வது சதம் அடித்தார்.
தொடர்ந்து ரூட் ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் அடித்து, இந்திய ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தார். பஷிர் ‘சுழலில்’ ரிஷாப் (118 ரன், 15×4, 3×6) அவுட்டானார். கார்ஸ் பந்தில் ராகுல் (137, 18×4) போல்டானார். கருண் நாயர் (20) நிலைக்கவில்லை.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 364 ரன்னில் ஆல் அவுட்டானது. ஜடேஜா (25) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து அணிக்கு 371 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நான்காவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 21/0 ரன் எடுத்து, 350 ரன் பின்தங்கியிருந்தது. கிராவ்லே (12), டக்கெட்(9) அவுட்டாகாமல் இருந்தனர். இன்று பவுலர்கள் அசத்தும்பட்சத்தில் இந்திய அணி வெற்றியை ருசிக்கலாம்.
லீட்ஸ் டெஸ்டில் அசத்திய ரிஷாப், 134, 118 ரன் எடுத்தார். இதன் மூலம் ஒரு டெஸ்டின் இரு இன்னிங்சிலும் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட்கீப்பர் என சாதனை படைத்தார். டெஸ்ட் வரலாற்றில், இரு இன்னிங்சிலும் சதம் அடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பரானார். ரிஷாப்.
* சர்வதேச அளவில், இரு இன்னிங்சிலும் சதம் விளாசிய இரண்டாவது விக்கெட்கீப்பரானார் ரிஷாப். இதற்கு முன் ஜிம்பாப்வேயின் ஆண்டி பிளவர் (142, 199*, எதிர், தெ.ஆ., ஹராரே, 2001) சாதித்திருந்தார்.
* இரு இன்னிங்சிலும் சதம் அடித்த 7வது இந்திய பேட்டர் ரிஷாப். இதற்கு முன் விஜய் ஹசாரே, கவாஸ்கர் (3), டிராவிட் (2), கோலி, ரகானே, ரோகித் சர்மா இப்படி சாதித்துள்ளனர்.
* இங்கிலாந்து மண்ணில் இரு இன்னிங்சிலும் சதம் அடித்த முதல் இந்திய பேட்டர் ரிஷாப் பன்ட்.
* இங்கிலாந்து மண்ணில் தொடர்ந்து 5 முறை 50+ ரன் எடுத்த ஜாம்பவான்கள் பிராட்மேன், குரோன்யே, சந்தர்பால், சங்ககரா, டேரில் மிட்சல் உடன் ரிஷாப் இணைந்தார். இங்கு கடந்த 5 இன்னிங்சில் ரிஷாப் (50, 148, 57, 134, 118) ரன் மழை பொழிந்துள்ளார். இப்பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் (7 முறை) முதலிடத்தில் உள்ளார்.
* இங்கிலாந்தில் ஒரு டெஸ்டில் அதிக ரன் எடுத்த விக்கெட்கீப்பரானார் ரிஷாப் பன்ட் (134+118=252 ரன்). இங்கிலாந்தின் அலெக் ஸ்டூவர்ட் (40+164=204, எதிர், தெ,ஆ., ஓல்டு டிரபோர்டு, 1998) சாதனையை தகர்த்தார்.
* இரு இன்னிங்சிலும் சேர்த்து ரிஷாப் 9 சிக்சர் (6+3) அடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்டில் அதிக சிக்சர் (9) அடித்த பிளின்டாப் (எதிர், ஆஸி,, எட்ஜ்பாஸ்டன், 2005), பென் ஸ்டோக்ஸ் (எதிர், ஆஸி., லார்ட்ஸ், 2009) சாதனையை சமன் செய்தார்.
* இங்கிலாந்து மண்ணில் அதிக ரன் எடுத்த அன்னிய விக்கெட் கீப்பர்களில் சக வீரர் தோனியை (778) முந்தி முதலிடம் பிடித்தார் இந்தியாவின் ரிஷாப். இவர் 12 இன்னிங்சில் 801 ரன் எடுத்துள்ளார்.
* இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்டில், இரு இன்னிங்சில் சேர்த்து அதிக ரன் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் ஆனார் ரிஷாப். இவர் மொத்தம் 252 ரன் (134+118) எடுத்துள்ளார். 1964ல் குந்தேரன் 230 (192+38, சென்னை), 2013ல் தோனி 224 ரன் (224+ -, சென்னை), எடுத்தனர்.
முதல் முறை 5 சதம்
ஒரு டெஸ்டில் இந்தியா சார்பில் முதல் முறையாக 5 சதங்கள் அடிக்கப்பட்டன. முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால், சுப்மன், ரிஷாப், 2வது இன்னிங்சில் ராகுல், ரிஷாப் என 5 பேர் சதம் அடித்தனர்.