கலிபோர்னியாவில் பதற்ற நிலைமை – குடியேற்ற போராட்டங்களை அடக்க தீவிர முயற்சி

கலிபோர்னியாவில் டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களால் நிலவும் பதற்ற நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றியும் சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் தீர்மானத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தமைக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
லொஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் தொகையில் கணிசமானோர் ஹிஸ்பானிக் மற்றும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான பின்னணியிலேயே அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றியும் சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் ட்ரம்பின் தீர்மானத்திற்கு அமைவாக கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
லொஸ் ஏஞ்ஜல்ஸில் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு படையினரை அனுப்பியுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக அவர்கள் கடமையில் ஈடுபடுவார்களென தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு படையினரை மீள அழைக்குமாறு கலிபோர்னிய ஆளுநர் கெவின் நிவ்சம் ஜனாதிபதி ட்ரம்பை வலியுறுத்தியுள்ளார்.
ட்ரம்ப் தலையீடு செய்யும் வரை தமது பிராந்தியத்தில் பிரச்சினை இருக்கவில்லையென அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை இறையாண்மை மீதான பாரிய மீறல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைதியாக செயற்படுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கலிபோர்னிய ஆளுநர் கெவின் நிவ்சம் கோரிக்கை விடுத்துள்ளார்.