ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றம் – போராட்டக்காரர்கள், பொலிஸார் இடையே தர்க்கம்
சேவை நிரந்தரம் கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று முன்னெடுத்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தர்க்க நிலை ஏற்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தின் போது இன்று (27) அவர்கள் நீதியின் மரணம்
எனக் குறிப்பிட்டு சவப்பெட்டியொன்றை எரித்தனர். இந்நிலையில் அதனை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் அறிவித்தனர்.
அத்துடன், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினால் நடைபாதை தடைப்படுவதாக பொலிஸார் தெரிவித்ததையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.
7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள தங்களை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்று (26) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தது.
எவ்வாறாயினும், அதற்கு முறையான பதில் கிடைக்காத காரணத்தினால் போராட்டக் குழுவின் நான்கு உறுப்பினர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.





