ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிப்பு – ட்ரம்பின் நடவடிக்கையால் ஏற்படும் பதற்றம்!
08 ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 10 சதவீதம் வரி விதிக்கப்போவதாக மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் ஐரோப்பிய தலைவர்கள் ட்ரம்பின் மேற்படி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப் கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க முனைப்பு காட்டி வருகின்ற நிலையில் ஐரோப்பிய தலைவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன், துருப்புக்களை ஆர்டிக் பகுதிக்கு அனுப்பிவைத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் பொருட்களுக்கு பிப்ரவரி 1 ஆம் திகதி முதல் 10% வரி விதிக்கப்படும் என்றும், கிரீன்லாந்தை கொள்வனவு செய்வது தொடர்பில் சாதகமான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் அந்த வரி 25 சதவீதமாக உயரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ட்ரம்பின் இந்த செயற்பாட்டை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் “முற்றிலும் தவறானது” என்றும், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இதை “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் விமர்சித்துள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட கையகப்படுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை கிரீன்லாந்து மற்றும் டென்மார்க்கில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
கிரீன்லாந்து மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் வளங்கள் நிறைந்தது மற்றும் வட அமெரிக்காவிற்கும் ஆர்க்டிக்கிற்கும் இடையில் அதன் இருப்பிடம் ஏவுகணைத் தாக்குதல்கள் ஏற்பட்டால் முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகளுக்கும் பிராந்தியத்தில் கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் ஏற்ற இடமாக அமைகிறது.
இதனை கருத்தில் கொண்டே ட்ரம்ப் அதனை அமெரிக்காவின் வசப்படுத்த திட்டமிட்டு வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.





