சுவிஸில் பயங்கரம்; பேருந்துக்குள் பயணி தீக்குளிப்பு; அறுவர் பரிதாபமாக உயிரிழப்பு
சுவிஸ் தலைநகர் பெர்னிலிருந்து மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கெர்சர்ஸ் (Kerzers) என்ற சிறிய நகரின் பிரதான வீதியில் நேற்று மாலை சுமார் 6:25 மணி அளவில் இந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது தீப்பிடித்துள்ளது.
இதில் இதுவரை குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த இன்னும் சில நாட்கள் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 3 பேர் மிக மோசமான நிலையில் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மற்ற இருவருக்குச் சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது.
காவல்துறை இந்தச் சம்பவத்தை ஒரு “தன்னார்வ செயலா” (Voluntary Act) அல்லது திட்டமிட்ட செயலா என விசாரித்து வருகிறது.
இந்த தீ பரவலுக்கு முக்கிய கரணம் பேருந்தில் இருந்த ஒருவர் தன் மீது எரிபொருளை ஊற்றித் தீ வைத்துக் கொண்டதாகவும், அதன் காரணமாகவே பேருந்து முழுவதும் தீ பரவியதாகவும் நேரில் பார்த்தவர்கள் மற்றும் சில வீடியோ ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்பதற்கான எந்த ஆதாரமும் தற்போது வரைகிடைக்கப் பெறவில்லை என்று பிரைபர்க் மாகாண காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
விபத்தின்போது பேருந்தின் அருகே கடையை மூடிக்கொண்டிருந்த மினா கெண்ட்ரே என்பவர் கூறுகையில், “பேருந்து திடீரென நின்றதைக் கண்டேன், அரை நிமிடத்திற்குள் அது தீப்பிழம்பாக மாறியது. ஒருவர் உடலில் தீயுடன் பேருந்திலிருந்து வெளியே ஓடி வருவதைப் பார்த்தேன்” என்று அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் சுவிஸ் அதிபர் கை பார்மெலின் (Guy Parmelin): “சுவிட்சர்லாந்தில் மீண்டும் ஒரு பயங்கரமான தீ விபத்தில் மக்கள் உயிரிழந்தது எனக்குப் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது” என்று தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
போஸ்ட்பஸ் (PostBus): விபத்துக்குள்ளான பேருந்தை இயக்கும் ‘போஸ்ட்பஸ்’ நிறுவனம், இந்தத் துயரமான செய்தியால் தங்களது ஊழியர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.





