இலங்கை சபாநாயகருக்கு பொறி வைப்பு: வருகிறது பிரேரணை!

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் நாளை மறுதினம் (21) இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.
ஒக்டோபர் மாதத்துக்குரிய 2ஆவது வார நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளை மறுதினம் ஆரம்பமாகின்றது. குறித்த வாரத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் முக்கிய கூட்டங்களும் இடம்பெறவுள்ளன.
இந்நிலையில் சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வரைவு நகல் கட்சி தலைவர்களுக்கு அன்றைய தினம் வழங்கப்படவுள்ளது. அவர்களின் இணக்கப்பாட்டுக்கு பிறகு பிரேரணை இறுதிப்படுத்தப்படும்.
பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகர் நிராகரித்திருந்தார். இவ்விடயத்தை பிரதானக் காரணமாகக்கொண்டே சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்குரிய ஏற்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தி செய்திருந்தது.
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிபெற வைப்பதற்குரிய பெரும்பான்மை பலம் எதிரணி வசம் இல்லை. இருந்தாலும் சபாநாயகர்மீது எதிரணிக்கு நம்பிக்கை இல்லை என்பது இதன்மூலம் எடுத்துரைக்கப்படும் என எதிரணி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.