கனடாவில் இலங்கை குடும்பம் கொலை – குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞர்
கனடா – ஒட்டாவாவில் கடந்த வருடம் இலங்கை குடும்பத்தை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆம் திகதி இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் தாய், நான்கு பிள்ளைகள் மற்றும் அவர்களின் நண்பர் உள்ளிட்ட ஆறு பேர் குத்திக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், ஒட்டாவா நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது, தம்மீது சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளில் நான்கு குற்றச்சாட்டுகளை இலங்கையரான சந்தேகநபர் டி. சொய்சா ஏற்றுக்கொண்டுள்ளார்.
கொலை சம்பவம் இடம்பெற்ற போது, டி. சொய்சா 19 வயதான சர்வதேச மாணவராக இருந்தார். அவர் ஒட்டாவாவின் பார்ஹேவன் (Barrhaven) புறநகர் பகுதியில் வசித்த விக்ரமசிங்க குடும்பத்தினருடன் அவர்களின் வீட்டின் அடித்தளத்தில் தங்கி வந்தார்.
நண்பர் என்ற ரீதியில் கற்றல் செயற்பாடுகளுக்காக, இலங்கை மாணவரான சொய்சா விக்ரமசிங்க குடும்பத்துடன் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொலை இடம்பெற்ற தினத்திலேயே சந்தேகநபரான சொய்சா கைது செய்யப்பட்டார். மாணவர் விசா காலம் நிறைவடைந்த நிலையில் கனடாவில் தங்கியிருந்த சொய்சா, தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் கொலை செய்ததாக ஆரம்பத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
கொலையை நடத்துவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னரே தாம் திட்டத்தை வகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை கொண்டு, ஏற்கனவே தற்கொலை முயற்சியிலும் சந்தேகநபர் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளமையால், சந்தேகநபருக்கு பிணையற்ற வகையில் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





