இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார் இலங்கை பாதுகாப்பு செயலர்!
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும், இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
புதுடெல்லியில் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் 7வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டக் கூட்டத்தின் ஒரு பகுதியாக மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு தரப்பு அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
இந்தச் சந்திப்பின் போது, இரு தரப்பினரும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபட்டனர் என்று பாதுகாப்பு அமைச்சின் இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்புப் பாதுகாப்பு மாநாட்டின் ஐந்து தூண்களான கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, பயங்கரவாதம் மற்றும் தீவிரமயமாக்கலை எதிர்த்தல், கடத்தல் மற்றும் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல், சைபர் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றுடன் இணைந்த பகுதிகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.





