இலங்கை – அநுர அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது!
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என்பதை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (05) உறுதிப்படுத்தினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“எங்கள் அரசாங்கம் எம்.பி.க்களுக்கு வாகன அனுமதிச் சீட்டுகளை வழங்குவதில்லை. எம்.பி.க்கள் தங்கள் கடமைகளைச் செய்ய ஒரு வாகனத்தை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 5 ஆண்டு பதவிக்காலம் முடிந்ததும், வாகனத்தை திருப்பித் தர வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, எம்.பி.க்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எம்.பி. வாகனங்கள் எங்கள் முன்னுரிமை அல்ல.” என்றும் அவர் கூறியுள்ளார்.