பேரிடரில் இருந்து மீள்வதற்கு போராடும் இலங்கை – ஜனாதிபதி கருத்து!
கடன் நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பில் இருந்து மீளக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் அதே வேளையில், பேரழிவை ஏற்படுத்திய டிட்வா சூறாவளியில் இருந்து மீள்வதற்கு இலங்கை போராடி வருவதாக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நியூஸ் வீக்கிற்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
குறித்த செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், வரலாற்று சிறப்புமிக்க கடன் மறுசீரமைப்பை நாங்கள் இப்போதுதான் முடித்துள்ளோம் எனவும், தற்போது கட்டுப்பாட்டை மீறிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஆபரேஷன் சாகர் பந்து மூலம் இந்தியா வேகமாக பதிலளித்தது. அவர்கள் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், விமானம் தாங்கிக் கப்பல் INS விக்ராந்த் உள்ளிட்ட கடற்படைக் கப்பல்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களை இலங்கைக்கு அனுப்பிவைத்தார்கள்.
அதேபோல் எங்கள் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் மாலத்தீவுகளும் விலைமதிப்பற்ற ஆதரவை வழங்கின என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையைப் பொறுத்தவரை, வெற்றி என்பது சந்தை அணுகல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட முதலீட்டு ஓட்டங்களைக் குறிக்கிறது.
இலங்கையை ஒரு நிலையான மற்றும் நம்பகமான கூட்டாளியாகவும், இந்தியப் பெருங்கடல் மையமாகவும் நிலைநிறுத்துவதற்காக நாங்கள் ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுகிறோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேநேரம் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கும் விளக்கமளித்த ஜனாதிபதி, வெளிநாட்டு இராணுவ தளங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம், அதை நாங்கள் செயல்படுத்துகிறோம். துறைமுக நகரம் முதன்மையாக ஒரு வணிக வளர்ச்சியாகும். இது வேலைவாய்ப்புகளை உருவாக்கும், முதலீட்டை ஈர்க்கும் மற்றும் வருவாயை ஈட்டும் நோக்கத்தில் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.





