பாதுகாப்பு உறவை வலுப்படுத்த இலங்கை, ஜப்பான் இணக்கம்!
ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் Aruna Jayasekara , அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சருடன் Shinjirō Koizumi பேச்சு நடத்தியுள்ளார்.
டோக்கியோவிலுள்ள ஜப்பான் பாதுகாப்பு அமைச்சில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் அமைந்தது.
இதன்போது குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ திறன் மேம்பாடு மற்றும் இந்து -பசுபிக் பிராந்தியத்தின் நிலைத்தன்மை ஆகியவை கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சந்திப்பின் போது, இந்து-பசுபிக் பிராந்தியத்தில் “Free and Open Indo-Pacific” என்ற கண்ணோட்டத்தின் கீழ் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது முக்கியமென ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஜயசேகர, இந்து சமுத்திரத்தில் இலங்கையின் முக்கிய புவியியல் அமைப்பையும், பிராந்திய கடல்சார் பாதுகாப்பை பாதுகாப்பதில் அதன் முக்கிய பங்கையும் வலியுறுத்தினார்.
சர்வதேச சட்டங்கள், உடன்படிக்கைகள் மற்றும் ராஜதந்திர நடைமுறைகளை மதித்து, பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான துறைகளில் ஜப்பானுடன் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை உறுதியாக இருப்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மேலும் இரு தரப்பின்னரும் மத்திய கிழக்கு நிலைமைகள் உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய விடயங்கள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டதுடன், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் வரவேற்றன.
பாதுகாப்பு பிரதி அமைச்சர், இலங்கையின் அணிசேரா நடுநிலை மற்றும் பக்கச் சார்பற்ற வெளிநாட்டு கொள்கையையும், சர்வதேச நெறிமுறைகள் மற்றும் சட்ட உடன்படிக்கைகளுக்கு உள்ள உறுதிப்பாட்டையும் வலியுறுத்தினார்.
ஜப்பான் கடல்சார் சுயபாதுகாப்புப் படையின்(JMSDF) Destroyer JS Onami கப்பலின் அண்மைய கொழும்பு துறைமுக வருகையும், இலங்கை கடற்படையுடன் நடைபெற்ற கடற்படை பயிற்சி தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.




