இலங்கை – மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, ரவைகள் மற்றும் மகசீன் மீட்பு

மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி.56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் ரவைகள், மகசீன் என்பவற்றை நேற்று இரவு விசேட அதிரடிப்படையினர் மீட்டு ஒப்படைத்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.
லயன்ஸ் கிளப் வீதியில் உள்ள காணி ஒன்றில் புதிதாக வீடு கட்டுமானப்பணி இடம்பெற்று வருகின்ற நிலையில் அங்கு மலசல கூடத்திற்கு குளி அமைப்பதற்கான நிலத்தை தோண்டும் போது புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் துப்பாக்கி இருப்பதை கண்டு விசேட அதிரடிப்படையினருக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் 50 துப்பாக்கி ரவைகள், 2 மகசீன்களை மீட்டனர். இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்களை ஒப்படைத்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.