இலங்கை – 50 மில்லியன் மதிப்புள்ள ஹெரோயினுடன் பெண் உட்பட நால்வர் கைது

சுமார் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட நால்வரைக் கொழும்பு குற்றவியல் பிரிவு கைதுசெய்துள்ளது.
முன்னதாக, மாளிகாவத்தை பகுதியில் 206 கிராம் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அங்கொட பகுதியில் அமைந்துள்ள அவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது நான்கு பொதிகளில் இருந்து 3 கிலோ 784 கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே மேலதிக விசாரணைகளின் போது கொழும்பு 14 உள்ள வீடொன்றில் இருந்து 106 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதுடன் இன்னுமொரு நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தொடர் விசாரணைகளின் போது வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து 206 கிராம் ஹெரோயினுடன் அடுத்த சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்செயல்களுக்கு உதவியாக இருந்த ஒருவரையும் மாளிகாவத்தை பகுதியில் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதாகிய சந்தேகநபர்கள் நால்வரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.