வெளியில் பணிபுரிய முடியாத அளவு வெப்பநிலையை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை

பாதுகாப்பாக வெளியில் பணிபுரிய முடியாத அளவுக்குக் கடுமையான வெப்பநிலையைக் கொண்ட சில தெற்காசிய நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
நாளொன்றில் சராசரியாக 6 மணிநேரம் மக்கள் பாதுகாப்பாக பணிபுரிய முடியாத நிலை காணப்படுகின்றன.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளும் இந்தப் பிரிவின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தெற்காசியாவில் மக்கள் மற்றும் நிறுவனங்களை மாற்றியமைக்க உதவுதல்’ என்ற தலைப்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள புத்தகத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2050 ஆம் ஆண்டுக்குள் இந்தநிலை நாளொன்றுக்கு எட்டு முதல் ஒன்பது மணிநேரமாக உயர்வடையும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தெற்காசியாவின் வானிலை, தீவிர அதிகரிப்பை எதிர்கொள்கிறது எனவும் அங்குள்ள சுமார் 90 சதவீத மக்கள் கடுமையான வெப்பத்திற்கு ஆளாக நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2030 ஆம் ஆண்டுக்குள் ஐந்தில் ஒருவருக்கும் அதிகமானோர் கடுமையான வெள்ளப்பெருக்கு அபாயத்தில் இருப்பார்கள் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு முதல், தெற்காசியாவில் சராசரியாக ஆண்டுக்கு 67 மில்லியன் மக்கள் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பத்தாண்டுகளில் வெள்ளத்தால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், தீவிர வெப்பநிலையால் ஏற்படும் இறப்புகள் அதிகரித்துள்ளதாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.