ஐரோப்பிய நாடொன்றில் நடைபாதைக்கு வேகக் கட்டுப்பாடா? வெளியான முக்கிய தகவல்
ஐரேப்பிய நாடான ஸ்லோவாக்கியாவில் நடைபாதைகளைப் பயன்படுத்தும் பாதசாரிகள் மற்றும் சைக்கிளோட்டிகளுக்கு மணிக்கு 6 கிலோமீட்டர் என்ற வேக வரம்பு விதிக்கப்பட்டுள்ளமை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியிருந்தது.
நடைபாதைகளைப் பயன்படுத்தும் போது மணிக்கு 6 கிலோமீட்டர் என்ற அதிகபட்ச வேக வரம்பைத் தாண்டக் கூடாது. இதனை வலியுறுத்தும் வகையில் முன்வைக்கப்பட்ட சட்டப் பரிந்துரையை அந்நாட்டு நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், புதிய சட்டம் அடுத்தாண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும் என செய்தி வெளியாகியிருந்தது. எனினும் தற்போது அந்த கட்டுப்பாடு நடைமுறைக்கு வராது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தை நாட்டின் பொதுமக்கள் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக சைக்கிளோட்டிகள் மத்தியில் இந்தச் சட்டம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
எனினும், இந்த “நடைபயிற்சி வேகம்” என்ற கட்டுப்பாடு, நடைபாதைகளில் அனுமதிக்கப்படும் மின்-ஸ்கூட்டர்கள் மற்றும் சைக்கிள்கள் போன்ற வாகனங்களுக்கான வேக வரம்பின் ஒரு குறிப்புப் புள்ளியாகும்.
இது நடைபாதையில் ஓட்டப்பந்தயம் செய்பவர்களுக்கோ அல்லது அவசரமாக நடப்பவர்களுக்கோ விதிக்கப்பட்ட தடை அல்ல எனப் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி உறுப்பினர் ஸ்மெரால் என்பவரால் முன்வைக்கப்பட்ட இந்த விதி, நடைபாதைகளில் வாகனங்களை மெதுவாக்கும் நோக்கம் கொண்டது. ஏனெனில், இவை அதிவேகமாகச் செல்வதால் பெரும்பாலும் கடுமையான விபத்துகள் ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
எனினும், பாதசாரிகளுக்கான கட்டுப்பாட்டுச் சட்டம் குறித்த விவாதத்தை போக்குவரத்து நிபுணர் மரோஸ் கபாக் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





