தூதரகங்கள், சுற்றுலா விடுதிகளுக்கு விசேட பாதுகாப்பு!
கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் விடுதிகளில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்தே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணிகள் அடிக்கடி வரும் விடுதிகள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க பொலிஸ்மா அதிபர், அனைத்து பிரிவுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
மூத்த பொலிஸ் அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றநிலையினால், வெளிநாட்டு தூதரகங்களை குறிவைத்து தாக்குதல்கள் மற்றும் போராட்டங்கள் இடம்பெறக் கூடும் என்ற கவலைகளை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூதரக பகுதிகள் மற்றும் சுற்றுலா மையங்களில் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பாதுகாப்பு மீறல்கள் ஏற்படாமல் இருக்க பகல் மற்றும் இரவு நேர ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும் நடமாடும் ரோந்துப் பிரிவுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பொது பாதுகாப்பு அமைச்சு மேற்பார்வையிட்டு வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் Aruna Jayasekara தெரிவித்துள்ளார்.





