கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாறிய பை – திறந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

சிகிரியாவிற்கு வந்த தாய்லாந்து பெண் ஒருவர், 70 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள குஷ் என்ற போதைப்பொருளை சிகிரியா பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாய்லாந்தைச் சேர்ந்த 17 பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று 12 ஆம் திகதி 12 நாள் சுற்றுப்பயணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
அவர்கள் சிகிரியாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு பேருந்தில் வந்தனர். அவர்கள் தங்கள் பொருட்களை சோதனை செய்தபோது, பெண் சுற்றுலாப் பயணி தனது பை கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாறியுள்ளதாக கூறினார்.
மாறிய பையை திறந்தபோது, போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா நிறுவன வழிகாட்டியுடன் சிகிரியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று அவற்றை சிகிரியா காவல்துறையிடம் ஒப்படைத்ததாக தம்புள்ளை உதவி காவல் கண்காணிப்பாளர் ருக்மல் தென்னகோன் தெரிவித்தார்.
பையை ஆய்வு செய்தபோது, 600 கிராம் எடையுள்ள குஷ் என்ற போதைப்பொருளின் 23 பக்கெட்டுகள் மிக மெல்லிய கருப்பு பாலிதீன் பைகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக சிகிரியா பொலிஸ் பொறுப்பதிகாரி, குறிப்பிட்டுள்ளார்.
தம்புள்ளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய அளவு இது என்று பொலிஸார் கூறுகின்றனர்.
போதைப்பொருள் பையை ஒப்படைத்த தாய்லாந்து பெண்ணிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும், பேருந்து ஓட்டுநர் மற்றும் சுற்றுலா வழிகாட்டியிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.