அரசியல் பாதையில் அவள் – மட்டக்களப்பில் பேரணி
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் மீது விதிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு அவர் மீது குற்றச்சாட்டுகள் இருக்குமானால் சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படவேண்டும் என்பதுடன் அவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபட அனுமதிக்கப்படவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும் கிழக்கு தமிழர் கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வு இன்று (08) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தலைமை காரியாலயத்தில் இருந்து “அரசியல் பாதையில் அவள்” எனும் தொனிப்பொருளில் பதாதைகளை ஏந்தியவாறு, பெண் உரிமைக் கோசங்களை எழுப்பியவாறும் பிரதான மகளீர் தின நிகழ்வு இடம்பெறும் அரசடி தேவநாயகம் மண்டபத்தை பேரணியாக வந்தடைந்தனர்.
இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் பல்வேறு கோஷங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்துகொண்டனர்.
பேரணியானது தேவநாயகம் மண்டபத்தினை சென்றடைந்ததும் அங்கு சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவி அமரர் திருமதி செல்வி மனோகரின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் சுசிகலா அருள்தாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன், கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களது தாயார் திருமதி.கமலா சிவநேசதுரை ஆகியோரது பிரதான பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் மாநகரசபை முதல்வர் சிவகீதா பிரபாகரன், வாகரை பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர்கள் ,கட்சி உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது இளம் கல்வியியலாளர் கௌரவிப்பு,உள்ளுராட்சிமன்ற பெண் உறுப்பினர்கள் கௌரவிப்பு நடைபெற்றதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்வின்போது வருடாந்தம் சர்வதேச மகளிர் தினத்தில் முன்னெடுக்கப்படும் மகளிர் பிரகடனம் கட்சியின் மகளிர் அணி செயலாளரினால் வாசிக்கப்பட்டது.





