இந்தியாவில் பூமிக்கடியில் இரகசிய எரிபொருள் குகைகள்: பின்னணி என்ன?
போர்ச்சூழலால் உலகளவில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், பூமிக்கடியில் 3 இரசிகய குகைகளில் இந்தியா கச்சா எண்ணெய் சேமித்து வைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
அவசர கால தேவைக்கு பயன்படுத்தும் வகையிலேயே மத்திய அரசு கச்சா எண்ணெயை இவ்வாறு சேமித்து வைத்துள்ளது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போர் போன்ற அவசர காலங்களில், திடீர் தேவை ஏற்பட்டாலோ, கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டாலோ அவசர தேவைக்கு பல லட்சம் டன்கள் கச்சா எண்ணெயை பூமிக்கடியில் சேமித்து வைக்கும் பணியை மத்திய அரசு பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றது.
ஆந்திராவில் விசாகப்பட்டினம், கர்நாடகாவில் மங்களூரு, படூர் என தென்னிந்தியாவில் 3 இடங்களில் இந்திய நாணய மதிப்பில் 4,100 கோடி ரூபா செலவில் இதற்காக பூமிக்கடியில் குகைகள் அமைக்கப்பட்டன.
இவற்றில் மிகப் பழமையானது விசாகப்பட்டினத்தில் உள்ளது. இதனை பெட்ரோலிய இருப்புகளை பராமரிக்கும் இந்திய பொதுத்துறை நிறுவனமான ஐஎஸ்பிஆர் 10 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தியது.
இந்த மூன்று குகைகளும் மொத்தம் 5.33 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை வைத்திருக்க முடியும். இதனமூலம் 10 நாட்களுக்கு தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
வெளிப்புற தாக்குதல்கள் அல்லது ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படாத வகையில் கச்சா எண்ணெயை இங்கு பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியும் எனவும் மேற்படி செய்தியில் கூறப்பட்டுள்ளது.





