விளம்பரம் வேண்டாம்: செயலில் காட்டுங்கள்: அரசிடம் சஜித் வலியுறுத்து!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதாக விளம்பரம் செய்வதுடன் நின்றுவிடாது, அந்த உதவிகள் விரைவில் மக்களை சென்றடைய வழிவகுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
யட்டியந்தோட்டை, கரவனெல்ல பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமைகளை பார்வையிட சென்றவேளையிலேயே சஜித் இன்று இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
“ நாட்டில் ஆபத்தான வானிலை நிலைமை உருவாகி வருவதாக கடந்த 11 ஆம் திகதி முதல் அறிவிப்புச் செய்யப்பட்டு வந்துள்ளன. அதனை மறுக்க முடியாது.
காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பின்னர் அது புயலாக உருவெடுக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிக்கும் போது, அதனைக் கருத்தில் கொண்டு இடர் முகாமைத்துவ நிலையம் முன்னாயத்த பணிகளை ஆரம்பித்திருக்க வேண்டும்.
மக்கள் மீது ஏற்படும் பாதிப்புக்களையும், அழுத்தங்களையும் குறைத்திருக்க முடியும். உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முடிந்திருக்கும்.
அனர்த்தம் வரப்போவதாகத் தெரிந்திருந்தும், இடர் முகாமைத்துவ நிலைய பொறிமுறை செயலிழந்து போய் காணப்பட்டது. நமது நாடு சுனாமியால் பாதிக்கப்பட்டது. அதன்பின்னரேனும் டாப்ளர் ரேடார் கட்டமைப்பை எம்மால் இன்னும் நிறுவ முடியாமல் தானே போய்யுள்ளது.
நான் இந்த டாப்ளர் ரேடார் கட்டமைப்பை நிறுவுவது தொடர்பில் 2014 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் வினவியிருக்கிறேன். ஆனால் எந்த பதிலையும் உரிய அரசாங்கங்கள் முன்வைக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு பேரிடருக்கும் பின்னும் அரசியல்வாதிகள் அதனைப் பொறுப்பேற்க வேண்டும். இக்கட்டான காலங்களில் ஓடி ஒளியாமல் யதார்த்தத்துக்கு முகம் கொடுக்க வேண்டும். பொறுப்பை அதிகாரிகள் மீது சுமத்தாமல் இருப்பதும் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகிய கொள்கை வகுப்பாளர்களின் பொறுப்பாகும்.
அதேபோல், இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் மிகவும் தாமதமாகச் செய்து வருகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசாங்கம் தற்போது குறைநிரப்பு பிரேரணையொன்றை சமர்ப்பித்துள்ளது. நாடு முகம்கொடுத்திருக்கும் நிலைமைகளை எடுத்துக்காட்டிஐ.எம்.எப் உடன் பேசுமாறு நாம் பல முறை கோரிக்கை விடுத்து வந்தோம் என சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டார்.




