விரைவில் ரஷ்ய – உக்ரைன் போர் முடிவுக்கு வரும்: ட்ரம்ப் உறுதி

ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், உக்ரைனுக்கான ஆயுத, நிதி உதவிகளை படிப்படியாக நிறுத்தி வருகிறார்.
இதைத் தொடர்ந்து கடந்த 18ம் திகதி சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது. முதல் நாளில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச் சர் மார்கோ ரூபியோவும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாரவும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தற்போது ரியாத்தில் அமெரிக்க, ரஷ்ய பிரதிநிதிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் பங்கேற்க உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.
இந்த சூழலில் அதிபர் ட்ரம்பை, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் வாஷிங்டனில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது இரு தலைவர்களும் ரஷ்யா, உக்ரைன் போர் குறித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்பிறகு அதிபர் மெக்ரான் நிருபர்களிடம் கூறும் போது, “உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த சில வாரங்களில் போர் முடிவுக்கு வரும். உக்ரைனின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக ட்ரம்ப் கூறும்போது, “உக்ரைன் போருக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அமைதி ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நான் ரஷ்யாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். பொருத்தமான நேரத்தில் மாஸ்கோ செல்வேன்” என்று தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் புதின் நேற்று முன்தினம் கூறும் போது, “போரை நிறுத்துவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைனும், ஐரோப்பிய நாடுகளும் பங்கேற்க வேண்டும். முதல்கட்டமாக அமெரிக்கா, ரஷ்யா இடையே நம்பிக்கையை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அமெரிக்காவுக்கு கனிமங்களை ஏற்றுமதி செய்யவும் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.