மியன்மாருடன் முதலீடுகளை ஊக்குவித்தல்,பரஸ்பர பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரஷ்யா

மியன்மாருடன் முதலீட்டு ஒப்பந்தத்தில் ரஷ்யா கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்ய எரிசக்தி நிறுவனங்களுக்கு மியன்மாரில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கையெழுத்திடப்பட்டது. ரஷ்ய பொருளியல் அமைச்சர் மேக்சிம் ரெஷேட்னிக்கோவும் மியன்மாரின் முதலீட்டு, வெளிநாட்டுப் பொருளியல் உறவு அமைச்சர் கான் ஸோவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கடலில் உள்ள கச்சா எண்ணெய், எரிசக்திக் கிணறுகளை மேம்படுத்த ரஷ்ய நிறுவனங்களை ஈர்க்க மியன்மார் தயாராக இருப்பதாக அமைச்சர் மேக்சிம் ரெஷேட்னிக்கோவ் கூறினார்.
மியன்மாரின் டாவெய் சிறப்புப் பொருளியல் மண்டலம் உட்பட பல்வேறு திட்டங்களை விரைவுபடுத்த இந்த ஒப்பந்தம் உதவும் என்று ரஷ்யா தெரிவித்தது. மியன்மாரின் ராணுவ ஆட்சியாளர்களுடன் ரஷ்யாவின் உறவு வலுவடைந்து வருகிறது. உள்நாட்டுப் போர், பலவீனமான பொருளியல், பசிப் பட்டினி போன்ற பிரச்சினைகளால் மியன்மார் சிரமப்பட்டு வருகிறது. மியன்மாரின் மக்கள் தொகை ஏறத்தாழ 55 மில்லியன். மூன்றில் ஒருவருக்கு உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மியன்மாரின் ராணுவத் தலைவர் மின் ஆங் ஹிலேங் கடந்த மார்ச் மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமியர் புட்டினைச் சந்தித்தார்.
மியன்மாரில் சிறிய அணு ஆலையைக் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் அதிபர் புட்டினும் திரு மின் ஆங் ஹிலேங்கும் கையெழுத்திட்டனர்.