உக்ரேன் மீது ஒரே இரவில் 500 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய ரஷ்யா

மூன்று ஆண்டுகளாக தொடரும் போரில் மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதலாக, உக்ரைன் மீது ரஷ்யா சுமார் 500 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது என உக்ரைன் விமானப்படை கூறியது.
உக்ரைன் மீது நேற்று இரவு 479 ட்ரோன்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் வரை 20 ஏவுகணைகள் பல்வேறு பகுதிகளில் ஏவப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ரஷ்யா முக்கியமாக மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளை குறிவைத்து தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
உக்ரைனின் விமானப்படை தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் 277 ட்ரோன்கள் மற்றும் 19 ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாகவும், 10 ட்ரோன்கள், ஏவுகணைகள் மட்டுமே தங்கள் இலக்குகளைத் தாக்கியதாகவும் கூறியது. இந்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைனின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ரஷ்யா கைப்பற்றிய இடங்களில் இருந்து, இப்போது புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இரு நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்துவதில் இன்னும் முன்னேற்றம் காணாத நிலையில், ரஷ்யாவும் உக்ரைனும் நேற்று தங்களின் போர்க் கைதிகளை மாற்றிக்கொண்டன. திங்களன்று அதிகமான கைதிகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக ஜெலென்ஸ்கி அலுவலகமும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் தெரிவித்தன, இருப்பினும் இரு தரப்பினரும் எத்தனை பேர் என்று கூறவில்லை. வடக்கு உக்ரைனின் செர்னிஹிவ் பகுதியில் ஒரு மருத்துவமனைக்கு வெளியே மக்கள் கூடி, தங்கள் உறவினர்கள் விடுவிக்கப்பட்டவர்களில் இருக்கிறார்களா என்று பார்த்தனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியதிலிருந்து 200க்கும் மேற்பட்ட உக்ரைன் போர்க் கைதிகள் சிறையில் இறந்துள்ளனர் என்று கடந்த மாதம் வெளியிடப்பட்ட அசோசியேட்டட் பிரஸ் அறிக்கை கண்டறிந்துள்ளது.
உக்ரைன், ரஷ்யாவுடன் தொடர்ந்து மோத மேற்கத்திய நாடுகளின் உதவியை எதிர்பார்த்துள்ளது. குறிப்பாக வான் பாதுகாப்புத் துறைகளிடமிருந்து உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் போர் குறித்த அமெரிக்காவின் சமீபத்திய நிலைப்பாடு காரணமாக உக்ரைனுக்கு உதவிகள் கிடைக்குமா எனத் தெரியவில்லை. இருப்பினும், ரஷ்யா மீது உக்ரைன் சில அதிர்ச்சியூட்டும் எதிர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.