முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே ரிஷப் பந்துக்கு தண்டனை விதிப்பு

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியின் 3-வது நளில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருந்த நிலையில் 61-வது ஓவரின் போது பந்தின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பந்தை மாற்றுமாறு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் துணை கேப்டனுமான ரிஷப் பந்த் களநடுவரிடம் கூறினார்.
பந்தை சோதித்து பார்த்த நடுவர், அதன் வடிவத்தில் எந்தவித வேறுபாடும் இல்லை. இதனால் பந்தை மாற்ற முடியாது என தெரிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த ரிஷப் பந்த், நடுவரின் முன்பாகவே பந்தை மைதானத்தில் வீசினார்.
இதுதொடர்பாக கள நடுவர்களான கிறிஸ் கஃபானி மற்றும் பால் ரீஃபல், மூன்றாவது நடுவர் ஷர்புதுலா இப்னே ஷாஹித் மற்றும் நான்காவது நடுவர் மைக் பர்ன்ஸ் ஆகியோர் ஐசிசி ரெஃப்ரீயிடம் புகார் கூறினர். இந்நிலையில் நடுவரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ரிஷப் பந்துக்கு, ஒரு தகுதியிழப்பு புள்ளியை வழங்கி ஐசிசி ரெஃப்ரீ ரிச்சி ரிச்சர்ட்சன் உத்தரவிட்டுள்ளார்.