வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை!
வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஆஸ்திரேலியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் Matthew Duckworth யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரை ramalingam chandrasekar சந்தித்து, அரசியல், பொருளாதார மற்றும் அபிவிருத்தி சார்ந்த முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போதே ஆஸ்திரேலிய தூதுவரிடம், அமைச்சர் சந்திரசேகர் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையிலான நீண்டகால உறவு , வடக்கின் நிலைவரம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இந்த சந்திப்பின் போது கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ஆஸ்திரேலிய அரசு வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்கு அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் நன்றி தெரிவித்தார்.
அத்துடன், தற்போது நாட்டை மீண்டெழ வைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் பற்றியும் அமைச்சர் விவரித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் NPP ஆட்சியின் கீழ் உருவாகி வரும் புதிய அரசியல் பண்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களுக்கான பொறுப்புணர்வு ஆகியவற்றையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
NPP ஆட்சியின் கீழ் வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் தெளிவாக எடுத்துரைத்தார்.
போருக்குப் பிந்தைய மீட்சி அரசியலை வெறும் வாக்குறுதிகளாக அல்லாமல், செயற்பாடுகளாக மாற்றும் உறுதியான அரசியல் தீர்மானங்களே இன்று வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திகளுக்குப் பின்னணி என அவர் குறிப்பிட்டார்.
மேலும், வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்கள் வெறும் முதலீட்டுக்கான நிலங்களாக மட்டுமல்லாது, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் பிராந்திய பொருளாதார சமநிலையை உருவாக்கும் திட்டங்களாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த முதலீட்டு முயற்சிகளுக்கு ஆஸ்திரேலியாவின் ஒத்துழைப்பும் அவசியம். குறிப்பாக ஆஸ்திரேலிய முதலீட்டாளர்கள் இங்கு வரவேண்டும்.
ஆஸ்திரேலியாவில் எமது புலம்பெயர் உறவினர்கள் வாழ்கின்றனர். எனவே, அவர்களின் பங்களிப்பையும் பெற்றுதருவதற்குரிய துணையாக தூதுவர் செயல்பட வேண்டும் என அமைச்சர் கோரிக்கை வீடுத்தார்.
அதேபோல், ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் தாய்நாட்டின் அபிவிருத்தியில் நேரடியாகப் பங்கெடுக்க வேண்டும் என அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அழைப்பு விடுத்தார்.
வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில், தம்மால் முடிந்த முழுமையான ஒத்துழைப்பை ஆஸ்திரேலியா வழங்கத் தயாராக இருப்பதாக தூதுவர் உறுதியளித்தார்.





