நாமலை களமிறக்கி புது அரசியல் ஆட்டத்தை ஆடும் ரணில்?
தமது கட்சியை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே வழிநடத்துகின்றார் என வெளியாகும் தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிராகரித்துள்ளது.
தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு (18) ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பங்கேற்றிருந்தார்.
இதன்போது “ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை ரணில் விக்கிரமசிங்கவே வழிநடத்துகின்றார் என்ற கருத்து அரசியல் களத்தில் நிலவுகின்றது.
நாமல் ராஜபக்கவை பொதுவேட்பாளராகக் களமிறக்கி ஆட்சியை பிடிப்பதற்கு அவர் முற்படுகின்றார் எனவும் கூறப்படுகின்றது. இது உண்மையா” என சாகர காரியவசத்திடம் வினவப்பட்டது.
அவ்வேளையிலேயே, இக்கூற்றை ஏற்க முடியாது. அதனை நிராகரிக்கின்றேன் என அவர் பதிலளித்தார்.
நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டு நலன் கருதியே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கும் முடிவை தமது கட்சி எடுத்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவேளை, மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் ராஜபக்ச ஆட்சி கவிழ்ந்தது.
ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு தப்பியோடினார். பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ச பதவி துறந்தார்.
இதனையடுத்தே ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பின்போது ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுத்தது.





