மாகாணசபைத் தேர்தல் – முறைமை குறித்து தீர்மானம் எட்டப்பட்ட பின்னரே திகதி அறிவிப்பு
மாகாணசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எட்டப்பட்ட பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கை இடம்பெறும் என்று பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
“மாகாணசபை தேர்தலை புதிய முறைமையில் நடத்துவதற்காக பழைய முறைமை கடந்த காலத்தில் இரத்து செய்யப்பட்டது. எனினும், இதற்குரிய நடவடிக்கை வெற்றியளிக்கவில்லை. சட்டமூலத்தை கொண்டுவந்த அமைச்சர்கூட அதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.” எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனவே, மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின்கீழ் நடத்துவது என்பது பற்றி முதலில் தீர்மானத்துக்கு வரவேண்டும். அனைத்து கட்சிகளின் இணக்கத்துடன் சிறந்த முறைமையை அறிமுகப்படுத்திய பின்னர் தேர்தல் நடத்தப்படும்.
ஜனநாயகத்தை வெளிப்படுத்துவதற்காக மக்களுக்கு உள்ள உரிமையை நாம் தடுக்கமாட்டோம். எனினும், கடந்தகாலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் பிரச்சினையாக உள்ளது. அது நிவர்த்தி செய்யப்பட்ட பின்னர் நடவடிக்கை இடம்பெறும். தேர்தல் திகதி பற்றி தற்போது உறுதியாகக் கூறமுடியாது.
தேர்தல் முறைமை பற்றி இறுதி முடிவை எட்டப்பட்ட பின்னர் அது நடத்தப்படும்.” எனவும் அமைச்சர் சந்தன அபேரத்ன மேலும் குறிப்பிட்டார்.





