பிரான்ஸில் கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள் – அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

பிரான்ஸில் சிறைச்சாலைகள் அளவுக்கு அதிகமான கைதிகளால் நிரம்பி வழியும் நிலையில் அதிகாரிகள் புதிய சிறைச்சாலைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், புதிய சிறைச்சாலைகளுக்கு பதிலாக நெதர்லாந்து சிறைச்சாலைகளை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கு உள்துறை அமைச்சர் மற்றும் நீதித்துறை அமைச்சர் ஆகிய இருவரும், நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நெதர்லாந்தில் 2004 ஆம் ஆண்டில் 20,000 சிறைக்கைதிகள் சிறைவைக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது 9,400 கைதிகள் மட்டுமே உள்ளனர். ஒவ்வொரு 100,000 பேருக்கும் 50 பேர் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் பிரான்ஸில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 80,000 இனை கடந்துள்ளது. ஒவ்வொரு 100,000 பேருக்கும் 114,000 பேர் கைதிகளாக உள்ளனர்.
நெதர்லாந்தில் சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பிரான்ஸ் போன்று குறைந்த தண்டனை வழங்கப்படுகிறது.
ஆனால் அங்கு தாமதங்களின்றி உடனடியாக சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. சிறிய குற்றங்களுக்கு என சிறிய சிறைச்சாலைகள் உள்ளன.
இதனால் முதல்தடவை குற்றம் செய்யும் குற்றவாளிகள், பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட கைதிகளை சந்திக்க முடியாது எனவும், அவர்கள் விரைவாக திருந்தவும், சிறைச்சாலையில் இருந்து விடுதலையான பின்னர் அவர்கள் சிறப்பாக வாழவும் இது வழிவகுக்கிறது.
கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு சிறைச்சாலை வடிவமைப்பையே பிரான்ஸில் உருவாக்க இருவரும் எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.