இலங்கையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற போர்வையில் கைதிகள் மோசடியாக விடுதலை

இலங்கையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற போர்வையில் கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர் எனும் விடயம், விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்தார்.
நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2024 கிறிஸ்மஸ் பண்டிகையின் போது 57 கைதிகளும், 2025 சுதந்திர தினத்தின் போது 11 கைதிகளும் தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் முறை கேடாக விடுவிக்கப்பட்டனர் என்று, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கூறியுள்ளார்.
பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார நிஷாந்த உபுல்தெனிய கொழும்பு மேலதி நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்த சமர்ப்பணங்களை வழங்கினார். சில கைதிகள் – ஜனாதிபதி மன்னிப்பு பெற்றதாகத் தெரிவிக்கும் போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் துஷார உபுல்தெனிய மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த வெசாக் தினத்தின் போது, நாடு முழுவதும் 29 சிறைகளில் இருந்து 338 கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும், அவர்களில் குறைந்தது இரண்டு பேர் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை மூலம் – சிறைச்சாலை மற்றும் சட்ட அமுலாக்க அமைப்புகளுக்குள் சீரழிந்து போயுள்ளமை தெரிய வந்துள்ளதாகவும், சட்டவிரோத நடைமுறைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் வேரூன்றத் தொடங்கியுள்ளமையை அறிந்து கொள்ள முடிவதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து சிரேஷ்ட சிறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளின் சொத்துக்கள் மற்றும் நிதிகள் குறித்து தனித்தனி, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
ஜூன் 06 ஆம் திகதி ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் எழுத்துப்பூர்வமாக வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்கம் (சிஐடி) தனது விசாரணையைத் தொடங்கியது.
இதனடிப்படையில், அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதுல திலகரத்ன என்ற கைதி – சட்டவிரோதமாக பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது. அதே சிறையில் இருந்து மற்றொரு கைதியும் இதேபோன்று சட்டத்துக்கு முரணான வழிகளில் விடுவிக்கப்பட்டதாககவும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை நாளை 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.