ட்ரம்பின் வரிகளால் ஏற்படக்கூடிய குழப்பத்திலிருந்து பிரிட்டிஷ் வர்த்தகங்களைப் பாதுகாக்க பிரதமர் ஸ்டார்மர் உறுதி

பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் புதிய வரிகளால் ஏற்படக்கூடிய குழப்பத்திலிருந்து பிரிட்டிஷ் வர்த்தகங்களைப் பாதுகாக்க தொழிற்துறை சார்ந்த கொள்கைகளைப் பயன்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய வரிகளைத் தவிர்க்க அமெரிக்காவுடன் வர்த்தக ரீதியான உடன்பாட்டைச் செய்துகொள்ள தொடர்ந்து முயற்சி செய்யப்போவதாக ஸ்டார்மர் குறிப்பிட்டார்.இருப்பினும், அரசாங்கம் தலையிட்டு வர்த்தகங்களைப் பாதுகாக்கவேண்டும் என்ற யோசனையை அவர் முன்வைத்தார்.
அரசாங்கம் தலையிட்டு நேரடியாகச் சந்தையை உருவாக்குவது பலர் விரும்பாத ஒன்றாக இருந்தாலும் மிகவும் விரைவாக மாறிவரும் உலகில் பழைய பஞ்சாங்கத்தைச் சார்ந்திருக்க முடியாது என்றார் அவர்.
அமெரிக்காவின் 10% வரிகளை எதிர்கொண்ட நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. அந்த 10% வரிக்கு அப்பால் பிரிட்டனிலிருந்து இறக்குமதியாகும் கார்கள் உட்பட எஃகு, அலுமினியம் போன்றவற்றுக்கு அமெரிக்கா கூடுதலாக 25% வரி விதித்தது.இன்னும் பல நாடுகள் ஏப்ரல் 9ஆம் தேதியிலிருந்து 50 விழுக்காடு வரையிலான வரிகளை எதிர்நோக்குகின்றன.
“அமெரிக்கப் பயனீட்டாளர்கள் இன்னும் கூடுதலான அமெரிக்கப் பொருள்களை வாங்கவேண்டும், அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதாரம் பெருகவேண்டும். இதற்காகத்தான் புதிய வரிகளை விதிக்கிறேன்,” என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
பிரிட்டனின் உள்நாட்டுப் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இந்த வாரம் அமல்படுத்தப்படும் என்று ஸ்டார்மர் சொன்னார்.
அமைதி காத்து அமெரிக்காவுடன் சிறந்த உடன்பாட்டை எட்டுவதுதான் பிரிட்டனின் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் அவர் சுட்டினார்.
பிரிட்டனின் வர்த்தகத்துக்கும் உழைக்கும் மக்களின் பாதுகாப்புக்கும் உகந்த உடன்பாட்டை மட்டும் மேற்கொள்ளப்போவதாகவும் அவர் கூறினார்.