செவ்வந்தி மூலம் அரசியல் தொடர்பு அம்பலம் – விசாரணை வேட்டை தீவிரம்!
பாதாள குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையும் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“பாதாள குழுவினருக்கு எதிராக பொலிஸார் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டுவருகின்றனர். இது சிலருக்கு வலிக்கின்றது. அதனால்தான் பொலிஸாரை இலக்கு வைத்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
பாதாள குழுவினருக்கு எதிரான நடவடிக்கை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. பாதாள குழு உறுப்பினர்களுக்கு சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 80 பேருக்கு இவ்வாறு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்களை இந்நாட்டுக்கு கொண்டுவருவதற்குரிய இராஜதந்திர முயற்சியும் எடுக்கப்பட்டுவருகின்றது.
செல்வந்தியை கொண்டுவந்து என்ன செய்தீர்கள் என சிலர் கேட்கின்றனர். இவர்களிடம் (செவ்வந்தி மற்றும் இந்தோனேசியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட குழு )மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சில அரசியல் தொடர்புகள் பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன. அது தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும்.
பொலிஸ் சேவை மிகவும் சுயாதீனமாக இடம்பெறுகின்றது. எவ்வித அரசியல் தலையீடும் மேற்கொள்ளப்படுவதில்லை. அதேபோல போதைப்பொருள் வலையமைப்பும் முடிவுக்கு கொண்டுவரப்படும்.” என்றார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால.





