இலங்கை ஜனாதிபதி அனுரகுமார தொடர்பில் பொய்யான செய்தியை பதிவிட்ட சந்தேக நபருக்கு பொலிஸார் வலைவீச்சு
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தொடர்பில் இணையத்தில் பொய்யான செய்தி வெளியிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தொடர்பான தவறான மருத்துவ அறிக்கையை இணையத்தில் வெளியிட்டமை தொடர்பிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விரிவான விசாரணைகளை நடத்தி, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்து, சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தரணி சுனில் வதகல செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிவித்தனர்.
சுபாஷ் என்ற நபரின் கணக்கின் ஊடாக இந்த போலியான தகவல்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுனில் வட்டகல தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.





