“ஈரானின் போர்க்கப்பல்களை இந்தியாவில் நிறுத்த அனுமதி”
ஈரானின் 3 போர்க் கப்பல்களை இந்திய துறைமுகத்தில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்று வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் Dr. S. Jaishankar தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து ஈரான் திரும்பிய ஐஆர்ஐஎஸ் தேனா போர்க்கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் இந்து சமுத்திரத்தில் தாக்கி அழித்தது.
இது விடயத்தில் இந்தியா மௌனம் காத்துவருவது தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் ஈரான் போருக்குப்பின் நடந்தது என்ன, இந்தியா எடுத்த நடவடிக்கைகள் எவை என்பன தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.
“இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச கடற்படை கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க 3 ஈரான் போர்க் கப்பல்கள் கடந்த மாதம் வந்தன.
அவற்றை இந்திய துறைமுகங்களில் நிறுத்த ஈரான் கடந்த 28 ஆம் திகதி அனுமதி கோரியது. இதற்கு மார்ச் முதலாம் திகதி இந்தியா அனுமதி வழங்கியது.
இதையடுத்து ஐஆர்ஐஎஸ் லவான் என்ற கப்பல் கொச்சியில் கடந்த மார்ச் 4-ம் திகதி நிறுத்தப்பட்டது. அதில் உள்ள கடற்படை வீரர்கள், இந்திய கடற்படை முகாமில் தங்கியுள்ளனர்.
இந்த மனிதாபிமான நடவடிக்கைக்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற போர்க்கப்பல்லை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் டார்பிடோ குண்டு மூலம் தாக்கி அழித்தது.
மற்றொரு ஈரான் போர்க் கப்பல் ஐஆர்ஐஸ் பூஷர் கப்பல் தங்கள் துறைமுகத்தில் நிறுத்திக் கொள்ள இலங்கை அனுமதி அளித்தது. அதில் இருந்த 208 வீரர்களும் இலங்கை கடற்படை முகாமில் உள்ளனர். “ எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.





