பாகிஸ்தான் சர்வதேச விமானச் சேவையின் 100% பங்குகளை விற்கத் தீர்மானம்
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அரச விமானப் போக்குவரத்து நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (PIA) நூறு சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய அந்நாட்டு அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. இது குறித்த மேலதிக தகவல்களை அந்நாட்டின் தனியார்மயமாக்கல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
விமான நிறுவனத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்த ஏலதாரர்கள் அனைவரும், கொள்வனவுக்குப் பின்னர் அரசாங்கத்தின் தலையீடு இன்றி முழுமையான முகாமைத்துவக் கட்டுப்பாட்டை கோரியுள்ளனர். இதன் காரணமாகவே, முதலில் திட்டமிட்டிருந்த பங்குகளை விட 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய அரசு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 23-ஆம் திகதி நடைபெறவுள்ள ஏலத்தில், முதற்கட்டமாக 75 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்படும். வெற்றி பெறும் ஏலதாரருக்கு, ஒரு மாத கால அவகாசத்திற்குள் எஞ்சிய 25 சதவீத பங்குகளை 12 சதவீத கூடுதல் விலையில் வாங்குவதற்கான முன்னுரிமை வழங்கப்படும். இந்த மேலதிகத் தொகை, உடனடிப் பணமாகச் செலுத்தாமல் ஓராண்டு தவணையில் செலுத்துவதற்கான வசதிக்காக அறவிடப்படவுள்ளது.
ஏலத் தொகையில் 7.5 சதவீதம் மட்டுமே பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு பணமாகக் கிடைக்கும். எஞ்சிய 92.5 சதவீத நிதி, நேரடியாக விமான நிறுவனத்திலேயே மறுமுதலீடு செய்யப்பட்டு, நிறுவனத்தின் சேவைகளை மீட்டெடுக்கவும் நவீனப்படுத்தவும் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





