03-05 வயது சிறுவர்களுக்கு நிகழ்நிலை வகுப்புகளுக்கு தடை
03 முதல் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கு நிகழ்நிலை ஊடாக கல்வி கற்பிப்பது கல்வி உளவியல் கோட்பாடுகள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முறைகளுக்கு முரணானது என பெண் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது முன்பள்ளி மற்றும் ஆரம்பப் பிரிவு மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் நிகழ்நிலை கருத்தரங்குகள் மற்றும் வகுப்புகள் தொடர்பாக பல சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி உளவியல் ரீதியான கருத்துக்களின்படி, 3 முதல் 5 வயது வரையிலான குழந்தையின் கற்றல் செயல்முறையானது செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதாகவும், சமூகத் தொடர்புகளைக் கொண்ட சூழலிலும் அமைய வேண்டும் என அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.
இத்தகைய வயதுடைய குழந்தைகள் நீண்ட நேரம் திரையைப் பார்த்து கல்வி கற்பது அவர்களின் சமூகத் திறன் வளர்ச்சிக்குத் தடையாக அமைவதோடு, கவனத்தை ஒருமுகப்படுத்தும் திறனையும் பாதிக்கலாம். மேலும், இது அவர்களின் ஆக்கபூர்வமான சிந்தனைக்கு ( பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் மற்றும் பெண் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளின்படி, முற்கால சிறுவர் பருவ அபிவிருத்தியில் குழந்தை சூழலுடன் நேரடியாகத் தொடர்புபட்டு அனுபவங்கள் மூலம் கற்றுக்கொள்வது அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சிறுவர்கள் தொழில்நுட்ப உபகரணங்களுக்கு அதிகமாக ஆட்படுவது அவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக மூளை வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், இத்தகைய வயதுப் பிரிவினருக்கு ஒன்லைன் வகுப்புகளை நடத்துவதை அமைச்சு அங்கீகரிக்கவில்லை.
வணிக நோக்கங்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் இவ்வாறான கருத்தரங்குகள் மூலம் குழந்தைகளின் கல்வித் தரம் கணிசமாக உயராது என்பதோடு, அவர்களின் இயற்கையான வளர்ச்சிக்கும் பாதிப்பு ஏற்படலாம் என அமைச்சு பெற்றோருக்கு அறிவித்துள்ளது.
எனவே, குழந்தைகளின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு, இவ்வாறான செயற்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு அமைச்சு பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், ஒரு சிறுவனுக்கு சிறந்த ஆசிரியர் டிஜிட்டல் திரை அல்ல, மாறாக சூழலும் நேரடி அனுபவங்களுமே ஆகும் என அமைச்சு மேலதிகமாக வலியுறுத்தியுள்ளது.





