உண்மையான பயனாளிகளைத் தெரிவு செய்ய வடக்கு ஆளுநர் அதிகாரிகளுக்குக் கடும் உத்தரவு
அரசாங்கத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டுமாயின், பிரதேச மற்றும் மாவட்டச் செயலகங்களுடன் இணைந்து சரியான பயனாளிகளைத் தெரிவு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகள் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் இன்று மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தின் போது, புதிய கட்டடங்கள் மற்றும் இயந்திரங்களுக்காக நிதி கோரப்பட்டதை அவதானித்த ஆளுநர், “ஏற்கனவே பல இடங்களில் அரச நிதியில் கட்டப்பட்ட கட்டடங்கள் பாவனையற்று உள்ளன. அவற்றை விடுத்துப் புதிய கட்டடங்களுக்கு நிதி செலவிடுவதைத் தவிருங்கள். முடங்கிக் கிடக்கும் இயந்திரங்களைப் புனரமைத்துப் பயன்படுத்துங்கள்” என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
2026ஆம் ஆண்டுக்கான திட்டமிடப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் குறித்த விபரங்கள் வருமாறு:
சமூக சேவைகள் திணைக்களம்: 226 மில்லியன் ரூபா.
தொழிற்துறைத் திணைக்களம்: 151 மில்லியன் ரூபா.
கூட்டுறவுத் திணைக்களம்: 23 மில்லியன் ரூபா
இந்த நிதி ஒதுக்கீடுகள் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில் ஆளுநரின் செயலாளர் உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.





