கர்நாடகா முதல்வருடன் நாமல் சந்திப்பு: இரு தரப்பு உறவு குறித்தும் ஆராய்வு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, கர்நாடகா Karnataka மாநில முதல்வர் சித்தராமையாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பெங்களூரிலுள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ வதிவிடத்தில் இன்று (28) மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
“ இந்தியாவின் மிக மூத்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவரை சந்தித்தது மகிழ்ச்சி.
இந்தியா-இலங்கை இருதரப்பு உறவுகள், கர்நாடகாவின் வளர்ச்சி மற்றும் சமூக நல முயற்சிகள் குறித்து விவாதித்தோம்.
மேலும் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையமாக கர்நாடகா தனது நிலையை தொடர்ந்து வலுப்படுத்துவதைக் காண ஊக்கமளிக்கிறது.” என்றுள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் இந்தியா அடைந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சூழலை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க சென்ற நாமல் ராஜபக்ச, அங்கு முக்கிய சந்திப்புகளிலும் ஈடுபட்டுவருகின்றார்.





