இலங்கையின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழை!

நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல் , சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போதுள்ள மழைவீழ்ச்சி அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில், 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை , திருகோணமலை மாவட்டங்களிலும், அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.