மத்திய கிழக்கு போர் சூழல்: விசா நீடிப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்!
மத்திய கிழக்கு ஊடாக மேற்கொள்கின்ற விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள வெளிநாட்டவர்களுக்கு கட்டண அறவீடின்றி வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்றது.
இதன்போது அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa மேற்படி தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவுகின்ற சூழ்நிலையால் அப்பிராந்தியத்திற்கு 2026.02.28 தொடக்கம் விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதனால் இலங்கையில் இருந்து வெளியேறிச் செல்வதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டவர்கள் தமது வீசா காலப்பகுதி முடிவடைவதற்கு முன்னர் வெளியேறிச் செல்வதற்கு இயலாமல் போயுள்ளது.
இவ்விசேட நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவ்வாறான பயணிகளுக்கு மாற்று வழிப்பயணங்களை தயார் செய்வதற்கு இயலுமை கிடைக்கும் வரைக்கும் இலங்கையில் சட்டபூர்வமாகத் தங்கியிருப்பதற்கான வசதிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதற்கமைய 2026.02.28 ஆம் திகதி தொடக்கம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேற்கொள்ளப்படவிருந்த விமானப் பயணங்களை இரத்துச் செய்தமையால், எமது நாட்டிலிருந்து வெளியேறிச் செல்வதற்கு இயலாமல் போயுள்ள வெளிநாட்டவர்களுக்கு 14 நாட்கள் காலப்பகுதிக்கு கட்டண அறவீடின்றி வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்வாறான விமான பயணங்கள் இரத்துச் செய்யப்படல் நிலைமை நீடித்தால் அவர்களது வீசாவை நீடிப்பதற்கான காலத்தை மேலும் 14 நாட்கள் வரை கட்டணமின்றி நீடிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.” – என்றார்.




