கடந்த மாதம் 6,000 பேரை பணிநீக்கம் செய்த பின்னர் மேலும் நூற்றுக்கணக்கானோரை ஆட்குறைப்பு செய்யும் மைக்ரோசாஃப்ட்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம், 300க்கு மேற்பட்டோரைத் திங்கட்கிழமை (ஜூன் 2) ஆட்குறைப்பு செய்துள்ளது.
வாஷிங்டன் மாநில அறிக்கை ஒன்றில் இத்தகவல் இடம்பெற்றிருப்பதாக அந்த அறிக்கையைப் பார்வையிட்ட புளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.மே மாதம், மைக்ரோசாஃப்ட் 6,000 பேரை வேலையிலிருந்து நீக்கியது நினைவுகூரத்தக்கது.
மைக்ரோசாஃப்ட் தொடர்ந்து நிறுவன அமைப்பில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்துவருவதாக அதன் பேச்சாளர் கூறினார். விறுவிறுப்பான சந்தையில் நிறுவனத்தை ஆகச் சிறந்த நிலையில் வைத்திருப்பதற்கு அந்த மாற்றங்கள் தேவை என்றார் அவர்.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் பில்லியன்கணக்கான டாலரை முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்டின் ஆட்குறைப்பு நடவடிக்கை, அதன் செலவுக் குறைப்பு முயற்சியைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.
மெட்டா தளம், மைக்ரோசாஃப்ட், உள்ளிட்டவை மென்பொருள் உருவாக்க முறையில் செயற்கை நுண்ணறிவின் செயல்திறனை எடுத்துரைத்துவருகின்றன.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மே மாதம் மேற்கொண்ட ஆட்குறைப்பு நடவடிக்கையில் மென்பொருள் பொறியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட ஆட்குறைப்பில் எந்தப் பிரிவு ஊழியர்களுக்குப் பாதிப்பு என்ற விவரம் தெளிவாகத் தெரியவில்லை.
2024ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 228,000 பேர் முழுநேரப் பணியாளர்களாக வேலை செய்தனர். அவர்களில் 55 விழுக்காட்டினர் அமெரிக்காவில் வேலை பார்த்தனர் என்று புளூம்பெர்க் குறிப்பிட்டது.