WhatsApp மோசடிகளுடன் தொடர்புடைய 6.8 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை நீக்கிய மெட்டா

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் மோசடிக்காரர்களுடன் தொடர்புடைய கிட்டத்தட்ட ஏழு மில்லியன் வாட்ஸ்அப் கணக்குகளை மெட்டா நிறுவனம் மூடியிருக்கிறது. மோசடிகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நிறுவனம் வலுப்படுத்திவருவதாகச் சொன்னது.
“குற்றக் கும்பல்கள் உருவாக்கிய கணக்குகளை அவர்கள் பயன்படுத்துவதற்குமுன் அடையாளம் கண்டு முடக்கிவிட்டோம்,” என்றார் வாட்ஸ்அப் வெளியுறவு விவகாரங்களுக்கான இயக்குநர் கிளேர் டீவி.
குற்றக் கும்பல்கள் நிர்வகிக்கும் அத்தகைய வாட்ஸ்அப் கணக்குகள் போலி மின்னிலக்க நாணய முதலீடுகளிலிருந்து எளிதில் பணம் ஈட்டக்கூடிய திட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்ற முயன்றன.
மோசடி நிலையங்களுடன் தொடர்பில் இருந்த 6.8 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளை மெட்டா நிறுவனம் கண்டுபிடித்துத் தடை செய்தது. அத்தகைய மோசடி நிலையங்கள் பெரும்பாலும் தென்கிழக்காசியாவில் இருந்தன.
கம்போடியாவில் இடம்பெற்ற மோசடியைத் தடுக்க ஓப்பன் ஏஐ நிறுவனத்துடன் வாட்ஸ்அப், மெட்டா நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டன.சேட்ஜிபிடியைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் இணைப்பைக் கொண்ட குறுஞ்செய்தியை அனுப்பி மக்களை ஏமாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவித்தன.
முன்பின் அறிமுகம் இல்லாதோரால் வெவ்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் சேர்க்கப்படுவது குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனீட்டாளர்களுக்கு அறிவுறுத்தியது.
குழுக்கள் பற்றிய தகவல்களை வாட்ஸ்அப் செயலியில் உள்ள புதிய பாதுகாப்பு கண்காணிப்பு அம்சம் தருகிறது. மேலும், மோசடிகளைக் கண்டறிவதற்கான குறிப்புகளும் வழங்கப்படுகின்றன.
“நம் எல்லாரும் இதை அனுபவித்திருப்போம். உங்களுக்குத் தெரியாத ஒருவர் உங்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்ப முற்பட்டுக் குழுக்களில் இணைக்க முற்படுவார்கள். குறைந்த அபாயம் கொண்ட முதலீட்டு வாய்ப்புகள் அல்லது எளிதில் பணம் ஈட்டும் வழிகள் போன்றவற்றை அவர்கள் விளம்பரப்படுத்துவார்கள்,” என்று மெட்டா அதன் வலைப்பதிவில் குறிப்பிட்டது.