ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ள மத்தள விமான நிலையம்

ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் K.D.S.ருவன்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் குறித்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்கீழ் மத்தளை விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் குறித்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும்.
அங்கு பணியாற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கான சம்பளமும் அந்நிறுவனத்தினூடாக வழங்க திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கூறினார்.
இதனூடாக கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதி, அரசுக்கு சொந்தமாகும் என அவர் குறிப்பிட்டார்
மத்தள சர்வதேச விமான நிலையத்தை பராமரிப்பதற்காக அரசாங்கம் வருடாந்தம் 2000 மில்லியன் ரூபாவை செலவிடுவதாகவும் புதிய வேலைத்திட்டத்தின் மூலம் அந்த தொகையை சேமிக்க முடியும் எனவும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.